வந்தே பாரத் ரயில்களால் நிரந்தர வேலை பறிபோகும் அபாயம்! எஸ்.ஆர்.எம்.யூ பொதுச் செயலாளர் கண்ணையா கண்டனம்!
திருச்சியில் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் பொதுச்செயலாளர் கண்ணையா தலைமையில் திருச்சியில் நேற்று தொடங்கி இன்றும் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற எஸ்.ஆர்.எம்.யூ பொதுச் செயலாளர் கண்ணையா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக எஸ்.ஆர்.எம்.யு, ஏ.ஐ.ஆர்.எப் தலைமையில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ஒன்று பட்டு போராடுவதை தடுக்கவே மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் மத்திய அரசு கொண்டு வரும் வரை எங்களது போராட்டம் தொடரும்.எஸ்.ஆர் எம்.யு, ஏ.ஐ.ஆர்.எப்ன் கடுமையான எதிர்ப்புகளாலும், தொடர் போராட்டங்களாலும், மத்திய அரசின் ரயில்வே தனியார்மயம் முயற்சிக்கு பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து எதிர்பார்த்த முதலீடும் வரவில்லை. ஐ.சி.எப்.வெற்றிகரமாக தயாரித்த ரெயில்-18 ல் குறைபாடுகள் மற்றும் தரமற்ற பொருட்கள் பயன்பாடு என “உயர் அதிகாரிகள் பலர் மீது ஊழல் கண்காணிப்பு அமைப்புகள் மூலம் குற்றம் சுமத்தி அதிகாரிகள் பலரின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியது மத்திய அரசு. தற்போது அதே டி. 18 ரயில்களை “வந்தே பாரத் ரயில்கள்” என்ற பெயரில் நாடெங்கும் அறிமுகப்படுத்தி, அவற்றை ரயில்வே பணிமனைகளிலேயே தயாரித்து, 35 ஆண்டுகளுக்கு பராமரிக்க ரயில் நிலையங்களிலேயே இடம் தருவதாக அழைப்பு விடுத்துள்ளது. இது கண்டனத்துக்குரியது. மேலும் தனியார் தயாரித்து 35 ஆண்டுகள் பராமரிப்பது என்பது ஆயிரக்கணக்கான ரயில்வே ஊழியர்களின் நிரந்தர வேலையை பறித்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது எஸ்.ஆர்.எம்.யூ. துணை பொது செயலாளர் வீரசேகரன் உடன் இருந்தார்.