தமிழகம் முழுவதும் ஆவின் பால் விநியோகத்தில் காலதாமதம் தொடந்து வருகிறது. கடந்த வாரம் சென்னை அம்பத்தூரில் ஆவின் பால் விநியோகம் தாமதமானதால் அங்குள்ள உதவி பொது மேலாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுபோன்று அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவதால் ஆவின் பால் வாங்கும் மக்களுக்கு எந்த வித பிரயோஜனமும் இல்லை என்பது நாம் அறிந்ததே! திருச்சியில் கடந்த ஒரு மாத காலமாக ஆவின் பால் தாமதமாக சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வீட்டில் ஆவின் பால் மட்டுமே அருந்தும் குழந்தைகள் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் . பால் சப்ளை செய்ய காலதாமதமாக வரும் நபர்களுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் வாக்குவாதம் நீடிக்கிறது .சிலருக்கு ஆவின் பால் அருந்தினால் மட்டுமே உடல் உபாதைகள் இல்லாமல் இருக்கிறது. பிற தனியார் பால்களை பயன்படுத்தும் போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல்நல ஒவ்வாமை பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் பெரும்பாலான மக்கள் ஆவின் பால் ஒன்றையே விரும்புகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பால் விநியோகம் தாமதம் ஆவதை கண்டித்து முகவர்கள் திருச்சியில் உள்ள ஆவின் நிறுவனத்தின் முன்பு திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் .அப்போது அதிகாரிகள் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய போது ஆவின் பால் பாக்கெட் செய்வதில் இயந்திர கோளாறு அடிக்கடி ஏற்படுகிறது என்றும் அது சரி செய்யப்படும் என்றும் தெரிவித்தனர் .ஆனால் அதன் பிறகும் தினமும் ஆவின் பால் சப்ளை காலதாமதமாகத் தான் மக்களுக்கு கிடைத்து வருகிறது .இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் கூறியதாவது :கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் பால் நிறுவனங்கள் பால்விலையை உயர்த்தினர் .அதேசமயம் அவர்களது நிறுவனத்திற்கு பால் சப்ளை செய்யும் கொள்முதல் வியாபாரிகளுக்கு பால் விலையை உயர்த்தியும் கொடுத்துள்ளனர் .அது போன்ற நிலை ஆவின் நிர்வாகத்தில் இல்லை. ஆவின் நிர்வாகத்தில் பால் விலை உயர்த்தி தரப்படாததால் ஆவினுக்கு தர வேண்டிய பாலை வியாபாரிகள் தனியார் நிறுவனத்திற்கு சப்ளை செய்கின்றனர். அதுதான் காரணம். ஆவின் நிறுவனத்திற்கு பால் சரிவர கிடைக்காததால் கிடைக்கிற பாலை பாக்கெட் போட்டு ஆவின் பால் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு சரியான நேரத்தில் பால் விநியோகம் செய்யப்படுவதுடன் மேலும் சில இடங்களுக்கு பால் சப்ளை காலதாமதமாக செய்யப்படுகிறது என்று தெரிவித்தார் .இந்தப் பிரச்சனை ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் அதனை மறைப்பதற்காக ஆவின் தலைமையகம் பால் சப்ளை தாமதம் என்ற பெயரில் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து மக்கள் கவனத்தை திசை திருப்பி வருகின்றனர் என்பது நடுநிலையாளர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை!