அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு, “அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும்” என்று தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகிய 4 பேரும்
சென்னை ஐகோர்ட்டில் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு அப்பீல் செய்தனர். இந்த அப்பீல் மனு கடந்த 31-ந்தேதி நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிபதிகள் முன் முறையிட்டனர். மேலும் நேரடியாக இறுதி விசாரணைக்கு தயார் என்று இரு தரப்பும் பதில் அளித்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார் வாதாட தொடங்கினார். புதிய உறுப்பினர்கள் சேர்க்கையின்போது எங்கள் ஆதரவாளர்கள் நீக்கப்படலாம். எனவே இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர் வாதாடினார். அப்போது உங்களுக்கு வாதாட எவ்வளவு நேரம் தேவை என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் “தலா 2 மணி நேரம் வேண்டும்” என்றனர். அதற்கு நீதிபதிகள், “இந்த வழக்கில் உங்களுக்கு வாதாட வருகிற 20 மற்றும் 21-ந்தேதிகளில் மதியம் 1.15 மணிக்கு தலா 2 மணி நேரம் ஒதுக்குகிறோம். அப்போது உங்களின் வாதங்களை முன் வையுங்கள். அந்த 2 நாட்களிலும் இறுதி விசாரணை நடத்தி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும் கருத்தில்கொண்டு அ.தி.மு.க.வில் உள்ள அனைத்து பிரச்சினைகள், கேள்விகள்,சிக்கல்களை தீர்த்து வைக்கிறோம். தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான இந்தஅப்பீல் வழக்கில் தற்போது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது. இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் அது சிக்கலை ஏற்படுத்தும்” என்றனர். இதன் மூலம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். மேலும் இந்த வழக்கை வருகிற 20-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
