திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழப்பு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 3-வது நாளாக போராட்டம்…!
திருச்சி மாவட்டம், முத்தரசநல்லூர் அருகேயுள்ள பழூவூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் திராவிடமணி (40). இவர் ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக கூறி ஜீயபுரம் போலீசாரால் செப்டம்பர் 27 -ம் தேதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 28-ம் தேதி இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரை சிறை மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரைத்துள்ளனர். அதன்பேரில் அவரை சிறை காவலர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் திராவிடமணியை போலீசார் சிறையில் வைத்து கடுமையாக தாக்கியதால் தான் அவர் இறந்து விட்டதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், திராவிட மணியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரியும் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்றாவது நாளாக இன்று திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் உறவினர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவரது உறவினர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், இழப்பீடு குறித்து அரசுதான் முடிவு செய்யும். ஆனால், மாரடைப்பு காரணமாக அவர் இறந்துள்ள நிலையில், போலீசார் தாக்கியதால் இறந்தார் எனக்கூறுவது ஏற்புடையதல்ல என்றனர்.
Comments are closed.