கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் வசித்து வருபவர் கனகராஜ் (64). ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரியான இவர் வட மாநிலங்களில் உள்ள ஆன்மீக சுற்றுலா தளங்களுக்கு பல்வேறு நபர்களை அழைத்துச் செல்லும் சுற்றுலா ஏற்பாட்டாளராக இருந்து வருகிறார். அதன்படி கடந்த செப்டம்பர் 3-ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஆதிகைலாஷ் கோயிலுக்கு சிதம்பரத்தைச் சேர்ந்த 30 பேரை அழைத்துச் சென்றார். இவர்களில் பெரும்பாலானோர் 60 வயதை தாண்டியவர்கள். சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் சென்ற அவர்கள், பின்னர் டெல்லியில் இருந்து சாலை மார்க்கமாக தனியார் வாகனம் மூலம் உத்தரகாண்ட் சென்றுள்ளனர். உத்தரகாண்ட் பகுதியை நெருங்குவதற்கு முன்பாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அவர்கள் அனைவரும் 3 நாட்கள் அங்குள்ள ராமகிருஷ்ண மடத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் பாதை சரி செய்யப்பட்ட பிறகு ஆதி கைலாஷ் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். இவர்கள் வந்த வாகனம் தாவாகாட் என்ற சிறிய கிராமம் அருகே வந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டு சாலை அடைபட்டது. இதனால் எந்த பக்கமும் செல்ல முடியாமல் அவர்கள் சென்ற வாகனம் சிக்கித் தவித்தது. இதனால், செய்வதறியாது தவித்த கனகராஜ், தனது நண்பர் சிதம்பரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கணேஷ் என்பவரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை விளக்கி உதவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து கணேஷ், கடலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர் இது தொடர்பாக தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வத்திற்கு தகவல் தெரிவித்தார். அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தகவல் தெரிவிக்கவே, அவர் நிலச்சரிவில் சிக்கித் தவித்த தமிழர்களை தொடர்பு கொண்டு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, தைரியமாக இருங்கள் என்று கூறினார். இந்த நிலையில் உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கித் தவித்த தமிழர்கள் 30 பேரையும் அங்குள்ள மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். அரை மணி நேரத்திற்கு 5 பேர் வீதம் ஹெலிகாப்டர் மூலம் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் டெல்லியில் இருந்து , விமானம் மூலம் நாளை இரவு சென்னை வந்து சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments are closed.