நெல்லை, தூத்துக்குடி , மாவட்டங்களில் தொடர்ச்சியாக யாதவ சமுதாயத்தினர் 13 பேர் படுகொலை: கடும் நடவடிகை எடுக்குமாறு தமிழக டி.ஜி.பி.க்கு பாரதராஜா யாதவ் வேண்டுகோள்….!
யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள தெற்கு பன்னம்பாறையை சேர்ந்த யாதவர் சுடலை ( வயது 55) என்பவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஆட்டுப்பண்ணையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது கடும் கண்டனத்திற்குரியது. குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆயிரக்கணக்கான யாதவ சமுதாயத்தினர் சுடலையின் உடலை பெறாமல் சாத்தான் குளம் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். விரைந்து வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லவும், உடலை பெற்றுக்கொள்ளவும் வலியுறுத்தியுள்ளார்கள். சில காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட யாதவ சமுதாய மக்களை கலைந்து போகச்சொல்லி மிரட்டியும் உள்ளனர். ஆனால், மூன்று நாட்களாகியும் கொலையாளிகள் ஒருவர் கூட பிடிக்கப்படவில்லை என்பது வேதனை தரும் விஷயம் ஆகும். இதுவரை நெல்லை- தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் யாதவ சமுதாயத்தை சேர்ந்த சுமார் 13 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். ஆண்டுகள்தான் கடந்துள்ளதே தவிர இதுவரை கொலையாளிகளில் எவர் ஒருவரும் நீதிமன்றத்தினாலோ,காவல்துறையினராலோ தண்டனை பெற வில்லை. சில நாட்களிலேயே சிறையிலிருந்து ஜாமீனில் வெளி வரும் கொலையாளிகள் மேலும் மேலும் தைரியமாக பல கொலைகளை செய்கின்றனர்.இந்த உண்மை நேர்மையான காவல்துறை அதிகாரிகள் பலருக்கும் நன்றாகவே தெரியும். ஆகவே, உடனடியாக தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜூவால் இப்பிரச்சினையில் தலையிட்டு பன்னம்பாறை சுடலையை கொன்றவர்களை கைது செய்யவும், இதுவரை 13 அப்பாவி யாதவர்களை கொன்ற குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலமாக கடும் தண்டனை பெற்றுத் தரவும், இனி எந்த ஒரு அப்பாவி யாதவர் உயிர் பலியாகாத வண்ணம் உரிய அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் பாரத முன்னேற்றக் கழகம் சார்பில் வேண்டுகோள் வைக்கின்றோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Comments are closed.