திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த பெற்றோரை இழந்த 10 வயது சிறுமி தனது தாத்தாவின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறாள். இந்நிலையில் திருச்சி உய்யக் கொண்டான் திருமலையைச் சேர்ந்த சின்ன ராஜா என்கிற ராஜா (21)
என்ற வாலிபர் சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து
தில்லைநகர் போலீசார், ராஜாவை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.
கொடுமை இழைத்த வாலிபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வாமடம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அச்சிறுமியின் உறவினர்கள் மற்றும் புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.எம்.பாபு, தில்லை பாலா, விஜய், தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்க பொதுச் செயலாளர் ஓம்.முத்துவேல், எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் அப்பாஸ், தமிம்அன்சாரி,தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பு குட்டி ஆனந்த் உள்ளிட்டோர்
தில்லைநகர் சாஸ்திரி ரோட்டில் இன்று(21-08-2024) திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தில்லைநகர் போலீசார், மேற்கு தாசில்தார் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் மறியல் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், சாலை மறியல் செய்த பொதுமக்கள் வேனில் கலெக்டர் அலுவலகத்திற்குச் சென்று மனு கொடுத்தனர்.
Comments are closed.