பாலியல் வன்கொடுமைகளை தடுக்க பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு புகார் குழு அமைக்காவிட்டால் அபராதம் – திருச்சி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…!
திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க புகார் குழு அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்
மா.பிரதீப்குமார் அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், திருச்சி மாவட்டத்தில் பெண்கள் பணிபுரியும் அனைத்து அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், பள்ளி, கல்லூரிகள், ஜவுளிக் கடைகள் என அனைத்து பணித் தளங்களிலும், பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் ஆகியவற்றில் பாலியல் வன்கொடுமையைத் தவிர்க்கும் வகையில் தொடர்புடைய நிறுனவங்கள், புகார் குழு அமைக்க வேண்டும். இந்தக் குழுவில் தலைமை அலுவலர், மூத்த நிலையிலான ஒரு பெண் அலுவலர், பணியாளர்களில் இரண்டு பேருக்கு குறையாத உறுப்பினர்கள், அரசு சாரா அமைப்பு அல்லது சங்கங்களிலிருந்து ஒரு உறுப்பினர் இடம் பெறுவர். இக்குழு பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை குறித்து உரியவாறு விசாரணை மேற்கொண்டு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும். ஒவ்வொரு துறை, நிறுவனமும் குழுவினை உடனடியாக அமைத்து அதன் விவரத்தினையும், உறுப்பினர்கள் விவரம் மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை திருச்சி மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த குழுவில் 50 சதவீதம் பெண்கள் இருத்தல் வேண்டும். குழுவின் பதவிக் காலம் 3 ஆண்டுகள் ஆகும். மேலும், பாதிக்கப்படும் பெண்கள் புகார் அளிப்பதற்கு ஏதுவாக பணியிடங்களில் தனியாக புகார் பெட்டி வைக்க வேண்டும். இதுவரை குழு அமைக்காமல் இருந்தால் வருகிற செப்டம்பர் 2-ம் தேதிக்குள் குழுவை அமைத்து அதன் விவரங்களை தெரியப்படுத்த வேண்டும். இது தொடர்பாக கூடுதல் விவரம் பெற வேண்டுமெனில் மாவட்ட சமூகநலத் துறை அலுவலகத் தொலைபேசி 0431- 2413796 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். குழு அமைக்காமல் இருப்பது தெரியவந்தால் சட்டப்படி ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என அதில் எச்சரித்துள்ளார்.
Comments are closed.