Rock Fort Times
Online News

திருச்சி எஸ்.பி.வருண் குமாருக்கு தன்னிச்சையாக விளக்க கடிதம் :- நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில நிர்வாகி அதிரடி நீக்கம்…!

முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் கடந்த மாதம் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். இதற்காக சிறையில் இருந்த அவர், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அதைத்தொடர்ந்து சீமான் பேசியதாகச் சொல்லி பல ஆடியோக்கள் வெளியானது. இந்த ஆடியோக்களை திருச்சி எஸ்பி வருண்குமார் தான் திட்டமிட்டு வெளியிடுவதாக சாட்டை துரைமுருகன் குற்றஞ்சாட்டினார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், திருச்சி எஸ்பி வருண்குமார் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் ஜாதிய நோக்கத்துடன் செயல்படுவதாக பொதுவெளியில் பகிரங்கமாக விமர்சித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பலரும் சமூக வலைத்தளங்களில் வருண்குமார் குறித்தும், அவரது குடும்பத்தினர் குறித்தும் அவதூறு பரப்புவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து திருச்சி எஸ்பி வருண்குமார் ஐபிஎஸ், தனது வழக்கறிஞர் மூலமாக சீமானுக்கு கிரிமினல் அவதூறு நோட்டீஸ் அனுப்பினார். தனக்கு எதிராக அவதூறு பரப்பியதற்காக ஏழு நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடாகத் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே இந்த விவகாரத்தில் இப்போது சீமான், தனது கட்சியின் வழக்கறிஞர் பாசறை மாநில செயலாளர் சேவியர் பெலிக்ஸ் மூலம் 16 பக்க விளக்க கடிதத்தை அளித்துள்ளார். அதில் அவர், “திருச்சி எஸ்பி வருண் குமாரின் சாதி என்னவென்றே எனக்குத் தெரியாது. சாட்டை துரைமுருகனிடம் வருண் குமாரின் ஜாதி இது என்று ஒரு காவல் அதிகாரி கூறியதாக என்னிடம் சொன்னதை நான் பேசிவிட்டேன். எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த தகவலும் தெரியாது. இளம் அதிகாரியான வருண்குமாருக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது. அவருக்குப் பதவி உயர்வுகள் மூலம் டிஜிபி ஆகும் அளவுக்குத் தகுதி இருக்கிறது. அவர் குறித்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அவதூறு கருத்து விவகாரத்திற்கும், எனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. நான் காவல் துறை மற்றும் காவலர்கள் மீது மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் கொண்டவன். போலீசாருக்கு 8 மணி நேரம் வேலை இருக்க வேண்டும் உள்பட போலீசாரின் பல உரிமைகளுக்கு நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், திருச்சி எஸ்.பி. வருண்குமாருக்கு தன்னிச்சையாக விளக்க கடிதம் கொடுத்ததாக வழக்கறிஞர் பாசறை மாநில செயலாளர் சேவியர் பெலிக்ஸ் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கடிதத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தன்னிடம் கலந்து ஆலோசிக்காமல் கடிதம் அனுப்பியதால் அவரை கட்சியிலிருந்து நீக்கி உள்ளதாக கூறியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்