திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். அனைத்து துறை அரசு அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு விவசாய சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் விவசாயிகளின் குறைகளை கோரிக்கை மனுவாக எழுதி கலெக்டரிடம் வழங்கினார்கள். முன்னதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத்தின் மாந்திரத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார் மாநில துணைத்தலைவர் மேகராஜன் முன்னிலை வகித்தார்.

இதில் மத்திய அரசின் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாயத்துக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். முசிறி மேட்டு வாய்க்காலில் அசுத்தம் கலப்பதை தடுக்க வேண்டும். முசிறி நகராட்சி பகுதியில் மேற்கு வாய்க்காலில் இருபுறமும் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும். ஆமை வேகத்தில் நடைபெறும் காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும். கோதாவரி நதிநீர் வீணாக கடலில் கலப்பதை காவிரியில் இணைப்பதாக உறுதிமொழி அளித்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.பிறகு வக்கீல் அய்யாக் கண்ணு தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பால் மற்றும் பருத்தி கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலக வாயிலில் தரையில் பருத்தி விதைகளை கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது பிறகு விவசாயிகள் அனைவரும் குறைத்திருப்பு நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர்.
