திருச்சியில் இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு தொடர்பாக திருவண்ணாமலையைச் சேர்ந்த நபரை போலீஸார் கடந்த திங்கள்கிழமை கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்தது:
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர், திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவர் உடலில் தீ வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை சாதகமாக்கிய அந்த நபர், இளம்பெண்ணை ஆபாசமாக படங்கள் எடுத்து வைத்துக்கொண்டு, குறிப்பிட்ட தொகை தராவிட்டால், படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியதாக கூறியுள்ளார்.இது குறித்து மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இளம்பெண் அளித்த புகாரின் பேரில், கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி ஞானமணி(40) என்பவரை கடந்த திங்கள்கிழமை கைது செய்தனர். கைதான அந்தோணி திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
