“விரைவில் தலைகள் சிதறும்” என திருச்சி எஸ்.பி.க்கு இன்ஸ்டாகிராமில் மிரட்டல் விடுத்த 3 சிறுவர்கள் கைது…!
திருச்சியில் சமீபத்தில் பிரபல ரவுடியான கொம்பன் ஜெகன் என்பவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ‘கொம்பன் ஜெகன் டீம்’ என்ற பெயரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் புகைப்படத்தை பகிர்ந்து, “விரைவில் தலைகள் சிதறும்” கொம்பன் பிரதர்ஸ் என்ற பதிவு பகிரப்பட்டிருந்தது. இது, திருச்சி மாவட்ட காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பேட்டவாய்த்தலை போலீஸார் வழக்குப் பதிந்து இந்தப் பதிவை வெளியிட்டது யார் என்று விசாரித்தனர். மேலும், எஸ்.பி. தனிப்படை போலீசாரும் இந்த பதிவை வெளியிட்டவர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தவர்கள் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் குருவம்பட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், மதுரை மாவட்டம் கண்ணனூரை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் என்பது தெரியவந்தது. அதன்பேரில், அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை போலீஸார் தேடி வருகின்றனர். இதுபோல பொதுமக்கள் மத்தியில் கலவரம், பொதுஅமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை செய்துள்ளார்.

Comments are closed.