விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். எனவே அந்த தொகுதிக்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் போதே இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை.
தற்போது 7 கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கையும் முடிந்து விட்டது. இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு வருகிற
ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 14-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 21-ம் தேதி கடைசி நாள் ஆகும். இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி உட்பட நாடு முழுவதும் மொத்தம் 13 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

Comments are closed.