Rock Fort Times
Online News

பெண் போலீசாரை விமர்சித்தது ஏன்? போலீஸ் விசாரணையில் சவுக்கு சங்கர் பரபரப்பு வாக்குமூலம்!

ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியதாக அவர்மீது, கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு யாஸ்மின் பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியது தொடர்பாக திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்தார். அதன்அடிப்படையில் சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அதேபோன்று, டெல்லியில் ஜெரால்டை கைது செய்து ரயில் மூலம் அழைத்துவந்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடிலிங்கம், சவுக்கு சங்கரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில், கோவை ஜெயிலிலிருந்து சவுக்கு சங்கரை பெண் போலீசார் நேற்று முன்தினம் திருச்சி அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் லால்குடி கிளை சிறையில் அடைத்தனர். பின்னர் நேற்று காலை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பான மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து சவுக்கு சங்கர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது சவுக்கு சங்கரின் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், ஏற்கனவே இந்த வழக்கில் கோவை போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். ஆகவே போலீஸ் காவலுக்கு அனுமதி அளிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயப்பிரதா, சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதைத் தொடர்ந்து அவரை திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.
அங்கே விடிய விடிய போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது,பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியதற்கு பின்னணியில் யார் யார்? இருப்பதாக கேட்டனர். அதற்கு பதிலளிக்கும் போது, யாரும் என்னை தூண்டவில்லை. ஆளுங்கட்சியை விமர்சிப்பது தான் ஜானலிசம். எடப்பாடி பழனிச்சாமி ஆளுங்கட்சியாக இருந்தபோது அவரை விமர்சனம் செய்துள்ளேன். பெண் போலீசார் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டேன். அது தப்புதான். அதை இப்போது உணர்ந்துள்ளேன்
என கூறியதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில் இன்று (மே-17) போலீஸ்காவல் முடிந்து மீண்டும் மாலை 4 மணிக்கு சவுக்கு சங்கரை
மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் ஆயத்தமாகி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்