“எங்களை போலீசார் அச்சுறுத்துகின்றனர்”- கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி முதல்வரின் தனிப்பிரிவில் புகார்…!
தமிழக பெண் போலீசார் குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பிய சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது பேட்டியை ஒளிபரப்பிய ரெட் ஃபிக்ஸ் யூடியூப் சேனல் செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, பெலிக்ஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று (16-05-2024) நீதிபதி சக்திவேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பெலிக்ஸ் ஜெரால்டு கடந்த வாரமே கைது செய்யப்பட்டு விட்டார். எனவே, அவரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி “பெலிக்ஸ் கைது செய்யப்பட்டு விட்டதால் அவரின் முன்ஜாமீன் மனு காலாவதியாகி விட்டது” என்று கூறி பெலிக்ஸ் ஜெரால்டின் மனுவை தள்ளுபடி செய்தார். இதற்கிடையே, பெலிக்ஸ் ஜெரால்டு கைது தொடர்பாக அவரது மனைவி ஜோன், முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார். தனது புகார் மனுவில், “காவல்துறை தரப்பில் பெலிக்ஸ்க்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் எங்கள் வீட்டிற்கு வந்து அச்சுறுத்துகின்றனர், எங்களை காவல்துறை துன்புறுத்துகிறது. நடந்த சம்பவத்துக்கு ஏற்கெனவே மன்னிப்பு கேட்டு விட்டோம். எனவே, எங்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளார்.

Comments are closed.