பிளஸ்-2 முடித்த மாணவ, மாணவிகள் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான’ நீட்’ தேர்வானது, இந்தியா முழுவதும் இன்று(05-05-2024) நடைபெற்றது. இந்தியா முழுவதும் இந்த தேர்வை 24 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய நிலையில், தமிழகத்தில் 1.5 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதற்காக திருச்சி மாவட்டத்தில் ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி, சாரநாதன் பொறியியல் கல்லூரி, சமது மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 13 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களில் 8 ஆயிரத்து 570 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெற்றது.

தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் இத்தேர்வு நடந்தது. மதியம் தேர்வு நடைபெற்றாலும் காலையிலேயே மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் தேர்வு மையத்தின் முன்பு குவிந்தனர். அவர்களுக்கு தேர்வு தொடங்குவதற்கு முன்பாக ஹால் டிக்கெட் சரிபார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்களை கழற்றுமாறு தேர்வு மையத்தினர் கூறியதையடுத்து அதனை மாணவிகள் கழற்றி தங்களது பெற்றோரிடம் கொடுத்தனர். இதுபோன்ற கெடுபிடிகளால் மாணவ, மாணவிகளின் பெற்றோர் அதிருப்தி அடைந்தனர்.


Comments are closed.