தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான’தல’என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித் குமாரின் தந்தை P.சுப்ரமணியம் (86) கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வயது மூப்பின் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளால் சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 3:15 மணி அளவில் தூங்கிக் கொண்டிருந்தபோதே உயிரிழந்துள்ளார். அவருக்கு அஜித் குமாருடன் சேர்த்து மூன்று மகன்கள் உள்ளனர். இவர் சென்னையில் மனைவியுடன் தனி இல்லத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் மரணமடைந்தார். நடிகர் அஜித் தற்போது வெளிநாட்டில் உள்ளார். அவருக்கு தந்தை இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் தந்தை மரணமடைந்த செய்தி அறிந்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். சமூக வலைதளங்கள் வாயிலாக அஜித்துக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அஜித்தின் தந்தை பி.சுப்ரமணியத்தின் உடல் இன்று சென்னை பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது இறுதி ஊர்வலத்தில் உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் அஜித் அவரது தந்தையின் இறுதி சடங்குகளில் பங்கேற்க இயலாத நிலை என்றாலும்’ அவர் வருவாரா ‘என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
