தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து விட்டதால் பறக்கும் படை சோதனை நிறுத்தப்படுமா?- தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு விளக்கம்…!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் சில மாநிலங்களில் நேற்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். தமிழகத்தில் தேர்தல் முடிந்து விட்டதால் வாகன சோதனை நிறுத்தப்படுமா? என்ற கேள்விக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார் . இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்துவிட்டதால் தேர்தல் சோதனையில் ஈடுபட்டு வந்த பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுக்களை தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பல இடங்களில் கலைக்க இருக்கிறோம். ஆனால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் நடக்கும்வரை, அந்த மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மட்டும் தேவைக்கு ஏற்ப பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் செயல்பாட்டில் இருக்கும். பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் கலைக்கப்பட்டாலும், தேர்தல் கமிஷனின் நடத்தை விதிகள் அப்படியே உள்ளன. எனவே, பொதுமக்கள் கையில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட ரூ.50 ஆயிரம் என்ற உச்சவரம்பில் மாற்றம் கிடையாது என்று கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.