திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்று வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் பூச்சொரிதல் விழா என்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பூக்களை எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.
இன்று (11.03.2024) அதிகாலை 5-40 மணி அளவில் கோவில் குருக்கள் கோவில் சன்னிதானத்தில் வலதுபக்கம் உள்ள சூரப்ப நாயக்கர் அம்பாளுக்கு (அபிஷேக அம்பாள்) தீபாராதனை காட்ட கையை மேலே தூக்கிய போது பந்தலில் கட்டி இருந்த வெட்டிவேரில் தீ பற்றிக்கொண்டது. இதில், கோவில் குருக்கள் சமயபுரம் சன்னதி வீதியைச் சேர்ந்த நாகநாதன் (55) என்பவருக்கு வலது தோள்பட்டையிலும், சமயபுரம் சக்தி நகரைச் சேர்ந்த குரு (40) என்பவருக்கு முகம் மற்றும் இரண்டு கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர், தீக்காயம் அடைந்த இரண்டு குருக்களையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.