திருச்சி புத்தூரில் உள்ள குழுமாயி அம்மன் கோவிலில் குட்டிக்குடித்தல் திருவிழா இன்று நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருச்சி உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் ஆறு கண் பாலம் அருகில் அமைந்துள்ளது குழுமாயி அம்மன் கோவில். சோழ மன்னர்களின் குல தெய்வமாக வணங்கப்பட்டு, தற்போது திருச்சி மாநகரத்தின் காவல் தெய்வமாக விளங்கும் குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடித்தல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 18-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

நேற்று முன்தினம் நள்ளிரவு காளியாவிட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அம்மனை கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க புத்தூர் மந்தைக்கு அழைத்து வந்தனர். நேற்று சுத்தபூஜை மற்றும் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டி குடித்தல், இன்று நடைபெற்றது. இதனையொட்டி புத்தூர் மந்தையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார் அம்மனின் அருள் பெற்ற மருளாளியை பக்தர்கள் மேளதாளம் முழங்க அழைத்து வந்தனர். அப்போது கொம்பு உள்ளிட்ட வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. பக்தர்கள் தங்களின் தோள் மீது அமர்த்தி மருளாளியை ஊர்வலமாக சுமந்து வந்தனர். அப்போது பக்தர்கள் நேர்த்திக்கடனாகவும், வேண்டுதலுக்காகவும் கொண்டு வந்திருந்த ஆட்டு கிடா குட்டிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மந்தைக்கு முன் உள்ள தேரின் அருகில் மருளாளி வந்ததும் கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்ட ஆட்டுக்குட்டிகள் மருளாளியிடம் தூக்கி கொடுக்கப்பட்டது. மருளாளி அவற்றின் ரத்தத்தை உறிஞ்சி குடித்து பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார். முதலில் அரசு சார்பில் மாவட்ட நிர்வாகத்தினால் ஆட்டுக்குட்டி வழங்கப்பட்டது. அந்த ஆட்டு குட்டியின் ரத்தத்தை மருளாளி முதலில் குடித்தார். அதனைத்தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டுக்குட்டிகள் பலியிடப்பட்டன. நாளை மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை மறுநாள் சாமி குடிபுகுதலும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அப்பகுதி பொதுமக்கள் சிறப்பாக செய்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.