போக்குவரத்து தொழிற்சங்கங்களின் போராட்டம் நடந்தாலும் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் சிவசங்கர் உறுதி…
தொழிற்சங்க போராட்டம் நடந்தாலும் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 15 வது ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதியர்கள் அகவிலைப்படி உயர்வு, பணியில் உள்ள தொழிலாளர்கள் 4மாத நிலுவைத்தொகை உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பினர் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.இதனிடையே போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட கோரி போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த நிலையில், முதலமைச்சரின் தனி செயலாளரான உமாநாத் மற்றும் நிதித்துறை செயலர் உதயசந்திரன் ஆகியோருடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு கூடுதல் செலவீனங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அரசின் நிதி நிலைமை குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், “தொழிற்சங்க போராட்டம் நடந்தாலும் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் என எதிர்பார்க்கிறோம். மக்கள் எந்தவொரு சிரமமும் இல்லாமல் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.