கோவை அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் முகமது என்பவர் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த மூன்று நபர்கள் அவரிடம் பேச்சுக்கொடுத்து தங்களிடம் 3 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் உள்ளதாகவும் அது அச்சு அசலாக உண்மையான பண நோட்டுகளை போலவே இருக்கும் என கூறி ஆசை வார்த்தை கூறியுள்ளனர். மேலும் ஒரு லட்சம் ரூபாய் உண்மையான நோட்டுகளை கொடுத்தால் 3 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து முகமது இங்கேயே இருக்கும்படி கூறி, நான் சென்று பணத்தை எடுத்து வருகிறேன் எனக் சென்றுள்ளார். இதனை நம்பி மூன்று பேரும் அங்கேயே காத்திருந்த நிலையில், அவர் சென்று ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அங்கு சென்ற காவலர்கள், மூன்று பேரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கோவை மற்றும் மதுரையை சேர்ந்த பிரகாஷ், கலைவாசன், சண்முக பிரசாத் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அவர்களை கைது செய்து, ஒரு காரையும் பறிமுதல் செய்தனர். மேற்கொண்டு கள்ள நோட்டுகள் குறித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்களிடம் கள்ள நோட்டு எதுவும் இல்லை என்பதும், இது போன்ற வீடியோக்களை காண்பித்து ஆசை வார்த்தை கூறி பணத்தை பறித்து செல்லும் கும்பல் எனவும் தெரிய வந்தது. இதனை அடுத்து அவர்கள் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
.