திருச்சி பெரியகடை வீதியில் செயல்படும் 4 நகைக் கடைகளில் நேற்று ( 20.11.2023 ) இரவு முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் தங்கம் விற்பனையாவதில் திருச்சிக்கும் முக்கிய பங்கு உண்டு. குறிப்பாக திருச்சி பெரியகடை வீதி, சின்ன கடை வீதிகளில் சிறியதும், பெரியதுமாக 200க்கும் மேற்பட்ட நகை கடைகளும், 100க்கும் மேற்பட்ட நகை பட்டறைகளும் செயல்பட்டு வருகின்றன. உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் நகை கடைகளிலும், பட்டறைகளிலும் வேலை பார்க்கிறார்கள். இங்குள்ள நகை கடைகளில் உரிய வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்வது, கணக்கில் காட்டாமல் பணம் கையாளப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில்
நகைக் கடைகளில் சட்டத்துக்கு புறம்பாக பண பரிவர்த்தனை செய்யப்படுகிறதா? என திருச்சி ஜாபர்ஷா தெருவில் உள்ள ரூபி ஜுவல்லரி, சூர்யா ஜுவல்லரி,
ஸ்ரீ சக்ரா ஜெய்ன்ஸ் உள்ளிட்ட 4 கடைகளில் 10ற்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் 6 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த கடைகளில் நடத்திய சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமலாக்கத் துறையினரின் இந்த சோதனை நகைக்கடை அதிபர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.