சக்திதலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எந்தவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாமல் சகல சவுபாக்கியங்களும் கிடைக்க மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருந்து பக்தர்களின் துயரை துடைப்பார் என்பது ஐதீகம்.அந்த வகையில், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்செரிதல் விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் திருவிழா நாளை தொடங்குகிறது. இதையொட்டி அதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் முடிந்து காலை ஆறு முப்பது மணிக்கு மேல் 8 மணிக்குள் மீன லக்னத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் பூச்செரிதல் விழா தொடங்குகிறது.பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படும். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். முக்கிய இடங்களில் கண் காணிப்பு கோபுரம் அமைத்து கண்காணிப்பதோடு பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு, விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம், காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. என்.கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் சார்பில், குடிநீர் வசதி, தற்காலிக கூடுதல் கழிப்பறைகள், குளியலறைகள் அமைககும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகள், சுகாதாரமற்ற உணவு பொருள்கள் கொண்டு வருவதை தவிர்க்க, குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சுகாதாரப் பணியாளர்களை கூடுதலாக நியமிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அன்னதானம் வழங்குபவர்கள் முறையாக பதிவு செய்து தரமான உணவு வழங்குவதை உணவு பாதுகாப்புத்துறை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
