திருச்சி மாரீஸ் தியேட்டர் அருகே (தற்போது எல்.ஏ.சினிமா) மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் வழியாக தில்லை நகர் மற்றும் உறையூர் மார்க்கத்தில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன. இதன் கீழ் பகுதியில் ரயில்கள் சென்று வருகின்றன. இந்தப் பாலம் கட்டப்பட்டு 157 ஆண்டுகள் ஆனதால் இந்த பாலம் பழுதடைந்தது. இதனால், கனரக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று வழியில் இயக்கப்பட்டு வருகின்றன. ஆகவே, இந்தப் பாலத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த பாலத்தை திருச்சி மாநகராட்சியும், ரயில்வே துறையும் செலவீனங்களை பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பாலம் இருவழிப்பாதையாக கட்டப்படுவதால் மெயின்கார்டு கேட் பகுதியிலிருந்து தில்லை நகர், தென்னூர், புத்தூர் மற்றும் உறையூர் பகுதிகளுக்கு போக்குவரத்து இடையூன்றி சுலபமாக செல்ல இயலும். இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று ( 20.11.2023 ) நடந்தது. விழாவில் அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். அதேபோல காவிரி கரை பகுதியில் பறவைகள் பூங்கா அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மாரீஸ் பாலம் பிரிஸ்டிட்ஸ்காரர்கள் கட்டியது, அது பழுதடைந்ததால் புதிய பாலம் கட்டுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.34 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். அதேபோல திருச்சியில் பெரிய அளவில் பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு இடங்கள் இல்லாத நிலையில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது முக்கொம்பில் பெரிய பூங்கா அமைக்கப்பட்டது. அதனை சீரமைக்க இந்தாண்டு நிதி ஒதுக்கப்படும். அதேபோல காவிரி கரையில் பறவைகள் பூங்கா அமைக்கப்படுவதன் மூலம், இங்கு நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேர் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீரங்கம் தொகுதியில் மேலூர் சாலை ரூ.138 கோடி செலவில் நீதிமன்றத்தில் இருந்து அல்லித்துறை வரை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. 110 கோடியில் திருச்சி அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு சட்டமன்ற தொகுதியில் மேம்பாட்டு பணிகளுக்காக இதுவரை 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிராட்டியூர் ஏரியில் நடைபாதை, சைக்கிள் ஓடுபாதை, குழந்தைகளுக்கான பூங்கா உள்ளிட்டவை அமைய உள்ளது. பஞ்சப்பூர் பேருந்து நிலைய பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் மார்க்கெட் பணிகள் தொடங்கப்படும். அங்குள்ள 100 ஏக்கர் கொண்ட ஏரியையும் அழகுபடுத்த உள்ளோம். திருச்சியில் 400 ஏக்கரில் உள்ள புங்கனூர் ஏரி, 150 ஏக்கர் உள்ள கள்ளிக்குடி ஏரி, மறவனூர் வரை உள்ள ஏரிகளை சீரமைத்து விவசாயத்திற்கும், பொதுமக்களுக்கும் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. குடமுருட்டி பாலத்தில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. எனவே, அண்ணாசிலையில் இருந்து கம்பரசம் பேட்டை வரை உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி இந்தாண்டு தொடங்க உள்ளோம். சிந்தாமணி பகுதியில் இருந்து ஜங்சன் வரை மேல்மட்ட பாலம் வருகிறது. அதேபோல் ஐடிபார்க் பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மெட்ரோ ஆய்வுக்குழு ஆய்வு செய்து அதற்கான அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தினால் உயர்மட்ட பாலங்கள் பாதிக்கப்படாது என்றார். விழாவில், மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப் குமாா் ஐஏஎஸ், மாநகராட்சி மேயா் மு.அன்பழகன், ஆணையா் வைத்திநாதன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினா் பழனியாண்டி, திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி மற்றும் மாநகராட்சி பொறியாளா்கள், அரசு அதிகாாிகள், திமுக நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.