Rock Fort Times
Online News

திருச்சியில் வாலிபரை கொன்று புதைத்த வழக்கில் மேலும் 3 பேர் சரண்…

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூர் காந்திநகர் காலனியை சேர்ந்த பெருமாள் மனைவி ராசாத்தி. இவருக்கு நந்தகுமார் (வயது 25), கார்த்திக் (22) என்கிற 2 மகன்கள். அவர்களில் கார்த்திக் அடிவாரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் வினோத் (எ) பன்றி வினோத் என்பவரிடம் வேலை பார்த்து வந்தார். கார்த்திக் பெரம்பலூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்ததாக தெரிகிறது. இதில், பிரச்சினை ஏற்பட்டதால் வீட்டிற்கு தெரியாமல் சென்னைக்கு சென்று அங்கு கூலி வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் நீண்ட நாட்களாக வீட்டுக்கு வராததால் துறையூர் காவல் நிலையத்தில், ராசாத்தி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது ஒரு புறம் இருக்க வினோத் மற்றும் கார்த்திக்கின் சகோதரரான நந்தகுமார் ஆகிய 2 பேரும், அடிவாரப் பகுதியை சேர்ந்த விஜய் (24) என்பவரிடம் கார்த்திக் பற்றி பாரில் வைத்து விசாரித்துள்ளனர். அப்போது விஜய்க்கும், வினோத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. அப்பொழுது வினோத் அருகில் இருந்த கட்டையை எடுத்து விஜயை தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், வினோத் மற்றும் நந்தகுமார் ஆகிய 2 பேரும், விஜயின் உடலை இருசக்கர வாகனத்தில் வைத்து பச்சைமலையில் உள்ள தாளூர் கிராமத்தில் உள்ள முந்திரி தோட்டத்தில் புதைத்தனர். தோட்டத்து உரிமையாளரான ஜெயராமன் சந்தேகம் அடைந்து துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், வட்டாட்சியர் வனஜா ஆகியோர் முன்னிலையில் அங்கு மூடப்பட்டிருந்த குழியை தோண்டி பார்த்ததில் அங்கு விஜயின் உடல் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் விஜயை, வினோத் மற்றும் நந்தகுமார் ஆகிய இருவரும் கொலை செய்தது தெரிய வந்தது.

அவர்களை போலீசார் தேடிவந்த நிலையில், அவர்கள் இருவரும் துறையூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் ஐபிஎஸ் விரைவாக புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் விஜய்யை கொலை செய்யும்பொழுது, வைரிசெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (27), அடிவாரப் பகுதியை சேர்ந்த சிவா (31) மற்றும் கார்த்திக்கின் தாயார் ராசாத்தி (42) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்தில் இருந்ததும், கொலை செய்த பிறகு பிணத்தை மறைக்க உதவி செய்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து 3 பேரையும் துறையூர் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் கீரம்பூர் கிராம நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணனிடம் சரணடைந்தனர். அவர்கள் 3 பேரையும் துறையூர் காவல் நிலையத்தில், விஏஓ ஒப்படைத்தார். இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த துறையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்