திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்பாளையம் ஊராட்சி சக்திநகர் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள மக்கள் மருந்துகள், மளிகை பொருட்கள் வாங்க சமயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட காருண்யா நகர் சாலை வழியாக சமயபுரம் தான் செல்ல வேண்டும் . ஆனால், காருண்யா நகர் முதல் அக்சயா நகர் வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வேறு பாதையில் செல்ல வேண்டும் என்றால் ஈச்சம்பட்டி வழியாக 3 கிலோ மீட்டர் சென்று வர வேண்டும். தற்போது மழை பெய்து வருவதால் இந்த சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும், இப்பகுதியில் தெருவிளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் இந்த சாலையை கடந்து செல்ல பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே காருண்யா நகர் முதல் அக்சயா நகர் வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டும், தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சக்தி நகர் குடிருப்போர் ஒவ்வொருவரும் வருகிற பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக தபால் கார்டில் எழுதி மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சமயபுரம் பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, அப்பகுதியில் காலிமனையாக உள்ள காருண்யா நகர் முதல் அக்சயா நகர் வரை டிடிசி அப்ரூவல் வாங்கவில்லை. அப்ரூவல் வாங்கினால் மட்டுமே மாவட்ட நிர்வாகத்தில் முறையான அனுமதி பெற்று, சம்மந்தப்பட்ட துறையுடன் பேசி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவித்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.