கிறிஸ்தவர்களால் ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் 2ம் தேதி சகல ஆத்துமாக்கள் தினம் என்னும் கல்லறை திருநாள்அனுசரிக்கப்படுகிறது. இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி இன்று நடந்த கல்லறை திருநாளில் மரித்தவர்களை அடக்கம் செய்த இடத்தில் அவர்களை நினைவு கூர்ந்து ஜெபித்து, மலர் தூவி, குடும்பம் குடும்பமாக சென்று மாலைஅணிவித்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். கிறிஸ்தவ திருச்சபை சார்பில் அங்கு சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டது. ஆயர்கள், பாதிரியார்கள் கல்லறைகளுக்கு சென்று ஜெபம் செய்து பிரார்த்தனைகளை நடத்தினர்.
திருச்சியில் கல்லறை தினத்தையொட்டி இன்று மேலப்புதூர் மார்சிங்பேட்டை வேர்ஹவுஸ் கல்லறை தோட்டம், சங்கிலியாண்டபுரம் கல்லறைத் தோட்டம், எஸ்.ஐ.டி கல்லறை தோட்டம், ஜி கார்னர் கல்லறை தோட்டம், பொன்மலைப்பட்டி உள்ளிட்ட கல்லறை தோட்டங்களில் கல்லறைகள் சுத்தம் செய்யப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இதில் திரளான கிறிஸ்தவர்கள் மலர்களை தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் மறைந்த முன்னோர்களின் நினைவுகளை கூர்ந்து பிரார்த்தனை செய்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.