திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்துவது தொடர்பாக மேயர் மு.அன்பழகன் தலைமையில் துணை மேயர் ஜி.திவ்யா, நகர் நல அலுவலர் மணிவண்ணன், மண்டல தலைவர்கள் துர்காதேவி, ஜெயா நிர்மலா மற்றும் சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்களுடன் ஆலோசனை கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் அன்பழகன் கூறுகையில்,மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் உள்ள 65 வார்டுகளிலும் தலா 50 போ் வீதம் கொசு ஒழிப்புப் பணியில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று கொசுப்புழு ஒழிப்பு மருந்து தெளித்தல், புகை மருந்து அடித்தல், தேவையற்ற இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வா். கொசுப் புழுக்களை அழிக்கும் எண்ணெய் பந்துகளையும் கழிவுநீா் செல்லும் ஓடைகளில் வீசி தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
சுகாதாரப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வீட்டிலோ, வீட்டின் சுற்றுப் புறத்திலோ டயா், தேங்காய் சிரட்டைகள், உடைந்த மண்பானைகள், பிளாஸ்டிக் குடங்கள், சிமெண்ட் தொட்டிகள், பிளாஸ்டிக் கப்கள் ஆகியவற்றில் தண்ணீா் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் தேக்கி வைத்துள்ள தண்ணீா் தொட்டிகளையும், பாத்திரங்களையும் நன்கு மூடி பராமரிக்க வேண்டும். நல்ல தண்ணீரில்தான் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களின் புழுக்கள் முட்டையிட்டு அபிவிருத்தியாகிறது. எனவே, ஏடிஎஸ் கொசுப் புழு வளராமல் அனைவரும் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.![]()


Comments are closed, but trackbacks and pingbacks are open.