பெரம்பலூர் மாவட்டம் திருநகர் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரது மகன் ராமராஜ் (வயது 26). மீன் வியாபாரியான இவர், வாரம்தோறும் திருச்சி உறையூர் பகுதியில் உள்ள காசி விளங்கி மீன் மார்க்கெட் வந்து மீன் வாங்கி செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று(29-10-2023) அதிகாலை ஒரு காரில் தனது நண்பர்கள் 4 பேருடன் திருச்சி வந்தார்.
அப்போது, அவரது காரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் அரிவாள்,கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ராமராஜை கொலை செய்ய முயன்றனர். இதனைப்பார்த்த ராமராஜ் சுதாரித்துக் கொண்டு உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக மீன் மார்க்கெட் பகுதியில் ஓடினார். ஆனாலும், விடாமல் அவரை துரத்திச் சென்ற அந்த கும்பல் அவரை கத்தியால் குத்தினர். மேலும், அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ராமராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அப்போது மீன் வாங்க வந்த வியாபாரிகளும், பொதுமக்களும் இந்த கொடூர சம்பவத்தை கண்டு அலறி அடித்து ஓடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட ராமராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், ராமராஜ் பெரம்பலூரில் செங்கோட்டுவேல் என்பவரை கொலை செய்த வழக்கு நிலுவையில் இருப்பதும், இந்த கொலைக்கு பழிக்கு பழி வாங்க அவரை பெரம்பலூரில் இதே கும்பல் இரண்டு முறை கொலை செய்ய முயன்றதும் தெரிய வந்தது. ஆனால், 2 முயற்சிகளும் தோல்வியில் முடியவே இன்றைய தினம் மீன் வாங்க ராமராஜ் திருச்சி வந்தபோது அவருக்கே தெரியாமல் பின்தொடர்ந்து வந்த நான்கு பேரும் பழிக்கு பழியாக அவரை கொலை செய்ததும் தெரிய வந்தது. மேலும் ராமராஜை கொலை செய்தவர்கள் கஞ்சா விற்பது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சியில் அதிகாலை நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.