திருச்சி கே.கே.நகர் ரிங் ரோடு பிரேம் நகர் பகுதியில் வசித்து வருபவர் சிந்தமாணி. ஆசிரியை. இவரது கணவர் செல்லத்துரை. போலீஸ்காரராக பணியாற்றி வந்த இவர் கடந்த 6 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். சிந்தாமணி சின்ன சூரியூர் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 17-ந் தேதி சிந்தாமணியின் தந்தை பச்சை மலையில் உயிரிழந்தார். இதற்காக சிந்தாமணி அங்கு சென்று விட்டார். இந்த வேளையில் நேற்று இவரது வீடு திறந்து இருப்பதை அறிந்து அருகில் இருந்தவர்கள் சிந்தாமணிக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சிந்தாமணி வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டு பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 45 பவுன் நகை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் வீட்டில் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து கே.கே. நகர் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த கே.கே. நகர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். திருச்சி கே.கே.நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக நகை பறிப்பு, வீட்டில் பூட்டை உடைத்து திருடுவது என பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. போதிய காவலர்கள் இல்லாத காரணத்தினால் குற்ற சம்பவங்களை தடுக்க இயலாத நிலை இருந்து வருவதாக தெரிகிறது.
எனவே, இந்த பகுதியில் கூடுதல் போலீசார் நியமித்தும், ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியும் திருட்டு சம்பவங்களை தடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.