தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியைச் சேர்ந்தவர் முகமது கனி (வயது 49). மீன் வியாபாரி. இவரது மனைவி சர்மிளா பானு (40). இத்தம்பதியினரின் 2 மகள்களுக்கும் திருமணம் முடிந்து விட்டது. இந்தநிலையில் முகமது கனிக்கும், ஷர்மிளா பானுவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். முகமது கனி செங்கிப்பட்டியில் வசித்து வருகிறார். ஷர்மிளா பானு திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த ஜான்பாஷா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு வசித்து வருகிறார். இந்தநிலையில் முகமதுகனி, ஷர்மிளா பானுவை பார்க்க மது போதையில் சுப்பிரமணியபுரம் வந்துள்ளார். அப்போது ஷர்மிளாபானு,
ஜான் பாஷாவுடன் இருந்ததைக் கண்டு ஆத்திரம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற முகமதுகனி அங்கிருந்த காய்கறி வெட்டும் கத்தியால் ஜான் பாஷா மற்றும் ஷர்மிளா பானுவை கத்தியால் குத்தியதால் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.