தமிழக காவல்துறையின் 62 ஆம் ஆண்டு மண்டலங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் இன்று திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் தொடங்கியது. இந்த விளையாட்டுப் போட்டிகளை தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவா் தமிழகம் தற்போது மிக அமைதியாகவும், சட்டம் ஒழுங்கு மிக சரியாகவும் செயல்படுகிறது. மதம், ஜாதி போன்ற எந்தவித மோதல்களும் இல்லாமல் சாராயம்,கொலை,கொள்ளை போன்றவற்றில் இறப்புகள் எதுவும் இல்லாமல் தமிழ்நாடு அமைதியாக இருப்பதற்கு காரணம் தமிழகத்தில் பணியாற்றக்கூடிய ஒரு லட்சத்து 34 ஆயிரம் காவல் துறையை சேர்ந்தவர்களால் தான் என்றாா். அதிலும் ஒரு லட்சம் காவலர்கள் தமிழக முழுவதும் தங்களுடைய பணியை சிறப்பாக செய்வதால் தான் இந்த பாதுகாப்பை உறுதி செய்ய முடிகிறது. தமிழக காவல்துறையினர் இளமையாக இருப்பதற்கு காரணம் இந்த விளையாட்டு போட்டிகள் தான் தமிழக காவல்துறையினர் தான் இளமைக்கு உதாரணமாக திகழ்கின்றனர். கடந்தாண்டு பத்தாயிரம் பேர் காவலர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 3200 காவலர்கள் மேலும் தேர்வு செய்யப்பட உள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு ஆயிரம் உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி 444 உதவி ஆய்வாளர்களுக்கு பயிற்சி தொடங்கியுள்ளது. இன்னும் 500 உதவி ஆய்வாளர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். அதில் பத்து சதவீதம் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும் தமிழக காவல்துறைக்கு விளையாட்டில் இந்திய அளவில் ஒரு பெரிய பங்கு உள்ளது என்று கூறினாா்.
