Rock Fort Times
Online News

சிறை கைதிகளை நல்வழிப்படுத்த வேண்டும்…! சிறைத்துறை இயக்குனர் அமரேஷ் பூஜாரி பேச்சு…

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள பயிற்சி மையத்தில் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சிறை காவலர்களுக்கு 7 மாத அடிப்படை பயிற்சியை சிறைத்துறை இயக்குனர் அமரேஷ் பூஜாரி இன்று தொடங்கி வைத்தார். சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையின் துணைத் தலைவர் ஜெயபாரதி வரவேற்று பேசினார். அதனைத் தொடர்ந்து சிறைத்துறை இயக்குனர் பேசியதாவது:-

ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டு 24 மணி நேரம் மட்டுமே ஒரு காவலரின் கட்டுப்பாட்டில் வைக்கப்படுவார். அதன் பின் நீதிமன்றம் குறிப்பிடும் நாள் வரை சிறைக்குள் நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் இருப்பார்கள். ஒரு குற்றவாளி சிறைக்குள் வருவது தண்டனைக்காக அல்ல. அவர் திருந்த வேண்டும் என்பதற்காகத்தான். எனவே, குற்றவாளிகளுடன் அதிக நேரம் செலவிடும் உங்களைப் போன்ற காவலர்கள் தான் அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். அவர்களோடு அதிக அளவில் கலந்துரையாடி அவருடைய பிரச்சனைகளை புரிந்து கொண்டு நீங்கள் பணியாற்றினால் சிறைக்காவல் துறை மிக சிறப்பாக இருக்கும். சிறையில் தண்டனை அனுபவிக்க கூடியவர்கள் அனைவரும் குற்றவாளிகள் இல்லை. அவர்களுடைய சூழ்நிலை அவர்களை குற்றவாளியாக மாற்றி உள்ளது. பயிற்சி முடிந்து பணிக்கு சேர்ந்தவுடன் தங்களுடைய உடல் நலனில் கவனம் செலுத்துவதில்லை. எனவே இது போன்ற நிலைகளை மாற்றிக் கொண்டு பணியாற்ற வேண்டும். இந்த சீருடைப் பணியானது காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு செல்வது அல்ல. 24 மணி நேரமும் உழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். எனவே உங்களுடைய சேவையை இந்த சிறை குற்றவாளிகளுக்கு செலவழித்து அவர்களை நல்வழி படுத்துவதற்கான பணியாக அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதனைத் தொடர்ந்து பயிற்சி காவலர்கள் தங்கும் விடுதி மற்றும் சமையல் அறை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முடிவில் மத்திய சிறையின் கண்காணிப்பாளர் ஆண்டாள் நன்றி கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்