போலி பாஸ்போர்ட் மூலம் திருச்சியில் இருந்து வெளிநாடு செல்ல முயன்ற 6 பேர் கைது- கோலாலம்பூரில் இருந்து வந்த 2 பேர் சிக்கினர்…!
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியா செல்ல பயணிகள் தயாராகிக் கொண்டிருந்தனர். அவர்களின் பாஸ்போர்ட்டை இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 48 ), அப்துல் ரஹீம் (52), அரபி முகமது (53) ஆகியோரது பாஸ்போர்ட் போலியானது என கண்டறியப்பட்டது. இதேபோல, சிங்கப்பூர் செல்ல இருந்த பயணிகளின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை இட்டபோது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி (43), போஸ் ( 53),உத்திர பசுபதி ( 60) ஆகியோரது பாஸ்போர்ட் போலியானது என தெரிய வந்தது.
மேலும், கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளை சோதனை செய்தபோது திருச்சி பீமநகர் ஹீபர் ரோடு பகுதியை சேர்ந்த சாகுல்அமீது ( 55 ), புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முகமது ராவுத்தர் (54) பாஸ்போர்ட் போலியானது என கண்டறியப்பட்டது. அதன்பேரில் அவர்கள் 8 பேரும் திருச்சி விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Comments are closed.