2023-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடர்பான அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் குரூப் சுற்றில் 10 அணிகளும், ரவுண்டு ராபின் அடிப்படையில் தங்களுக்குள் பல போட்டிகளை நடத்தும் இதில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணி அரை இறுதிச் சுற்றுக்கு செல்லும். இந்திய அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 8-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 11-ம் தேதி டெல்லியில் இந்தியாவும், ஆப்கானிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத்தில் நடக்கிறது. இதனை தொடர்ந்து அக்டோபர் 19ம் தேதி இந்தியா- வங்காள தேசம் அணிகள் புனேவில் மோதுகின்றன. இதனை தொடர்ந்து அக்டோபர் 22ம் தேதி இந்தியா- நியூசிலாந்து அணிகள் தர்மசாலாவில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதன்பிறகு இந்திய அணிக்கு ஒரு வாரம் போட்டிகள் இல்லை. அக்டோபர் 29ம் தேதி லக்னோவில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. நவம்பர் இரண்டாம் தேதி இந்திய அணி தகுதிச்சுற்றுக்கு வெல்லும் அணியுடன் மும்பையில் விளையாடும். நவம்பர் 5ம் தேதி கொல்கத்தாவில் இந்தியா தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. நவம்பர் 11ம் தேதி இந்திய அணி தகுதி சுற்றில் இருந்து வரும் இரண்டாவது அணியை பெங்களூரில் எதிர்கொள்கிறது. இந்தப் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் இந்திய அணி 5 அல்லது 6 அணிகளையாவது வீழ்த்த வேண்டும். இதில் , வங்காள தேசம்- ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் இருந்து வரும் 2 அணிகளை வீழ்த்திவிட்டு பெரிய அணிகள் இரண்டை இந்தியா வீழ்த்தினால் அரை இறுதிச்சுற்றுக்கு எளிதாக சென்று விடலாம். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டின் வடிவமே மாறிவிட்டது. அனைத்து அணி வீரர்களும் தற்போது அதிரடியாக விளையாடுகிறார்கள். இதனால் இந்தியாவுக்கு இந்த பயணம் எளிதாக இருக்காது என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.