தமிழக பாரதீய ஜனதா கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளரான திருச்சி சூர்யா, அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும், மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் திருச்சி சூர்யாவை நீக்குவதாக இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலத் தலைவர் சாய் சுரேஷ் தெரிவித்துள்ளார். இதேபோல, ஆதாரங்களின்றி கட்சி நிர்வாகிகள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாகக் கூறி கட்சியின் சிந்தனையாளர் பிரிவின் மாநில செயலாளர் கல்யாணராமனும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஓராண்டுக்கு தற்காலிகமாக நீக்கப்படுவதாக அலுவலக செயலாளர் அறிவித்துள்ளார்.
இவர்கள் இருவருடனும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான திருச்சி சூர்யா, தமிழிசை சௌந்தரராஜன் குறித்து அவதூறு கருத்துகளை யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில் பேசி வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்ட கல்யாணராமனும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். திருச்சி திமுக எம்.பி சிவாவின் மகன் தான் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.