சமீப காலமாக இளைஞர்கள் தங்களது உடலில் டாட்டூக்கள் வரைந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல நடுத்தர வயது மற்றும் இளம் பெண்களும் டாட்டூ வரைந்து கொள்கின்றனர். இதன் காரணமாக டாட்டூ வரையும் சென்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஏலியன் டாட்டூ என்ற பெயரில் டாட்டூ நடத்தி வந்தவர் ஹரிஹரன்.
இவர், இங்கு வருபவர்களுக்கு உடலில் டாட்டூ வரைவதோடு கண்களுக்குள் வண்ணம் தீட்டுவது, நாக்கை ஆபரேஷன் செய்து இரண்டாக பிளவுபடுத்தி வண்ணம் தீட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுதொடர்பான வீடியோக்களை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்தநிலையில் இளைஞர்கள், மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக அவர் மீது சமூக வலைதளங்களில் பலரும் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.
இதையடுத்து மருத்துவ கட்டுப்பாட்டை மீறி ஆபரேஷன் செய்தது உள்ளிட்ட காரணங்களால், மாநகர காவல் ஆணையர் காமினி ஐபிஎஸ் உத்தரவின்பேரில் அவர் மீது 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹரிஹரன் மற்றும் அவர் கடையில் பணியாற்றிய ஜெயராமன் இருவரையும் கைது செய்தனர். மேலும், போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட டாட்டூ சென்டருக்கு மாநகராட்சி அதிகாரிகள் “சீல்” வைத்தனர்.
Comments are closed.