ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாகேஸ்வரராவ் என்பவரது மகன் வெங்கடேஷ் (வயது 19) மற்றும் சீனிவாச ராவ் மகன் லட்சுமி அரவிந்த் ( வயது 19) உள்ளிட்ட 8 பேர் திருச்சி சமயபுரம் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கி தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்று வருகின்றனர். இன்று, ( ஞாயிற்றுக்கிழமை ) கல்லூரி விடுமுறை என்பதால் மதியம் வெங்கடேஷ் , லட்சுமி அரவிந்த் ஆகியோர் தனது நண்பர்கள் 8 பேருடன் சமயபுரம் மாரியம்மன் கோவில் முடி காணிக்கை மண்டபம் அருகில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றனர். கிணற்றில் குதித்து அவர்கள் நீச்சல் அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். இவர்களில் வெங்கடேஷ்க்கு நீச்சல் தெரியாது என்பதால் கிணற்றில் ஆழமில்லாத பகுதியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கியுள்ளனர் இதனை கண்ட அவரது நண்பர் லட்சுமி அரவிந்த் உடனடியாக அவரை மீட்க முயற்சித்தார். ஆனால் இருவரும் நீரில் மூழ்கி மாயமானார்கள். உடனடியாக மற்ற நண்பர்கள் இருவரையும் தேடியுள்ளனர். நீண்ட நேரமாகியும் அவர்களை மீட்க முடியாததால் உடனடியாக போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த சமயபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் 2 மணி நேரத்துக்கு மேலாக போராடி, கிணற்றில் மூழ்கிய இருவரையும் சடலமாக மீட்டனர். பின்னர் அவர்களுடைய உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.