Rock Fort Times
Online News

முந்தைய ஆட்சியில் அறநிலையத் துறை ஊழல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்: -அமைச்சர் ரமேஷ்…!

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் ஆகியோர் திருச்சி அரசு போக்குவரத்து கழக வளாகத்தில் உள்ள தீரன் சின்னமலை உருவச் சிலைக்கு இன்று(03-08-2026) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் தனித்து விடப்பட்டிருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். உண்மையிலேயே தனித்து விடப்பட்டது யார் என ஸ்டாலினிடம் கேளுங்கள். சட்டமன்றத்திலிருந்து பேசிக்கொண்டிருந்த ஸ்டாலின் இன்று சட்டமன்ற நிகழ்வுகளை வீட்டில் இருந்து பார்க்கக்கூடிய நிலைமைக்கு தனித்து விடப்பட்டிருக்கிறார் என்பதுதான் உண்மை. எல்லா விஷயத்தையும் பேசி பேசி தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. செயலில் காட்டினால் போதும். எங்களுடைய முதல்வர் செயலில் காட்டக்கூடியவர். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த ஆந்திர பெண்ணிடம் ரூ.2,000 லஞ்சம் பெற்றதாக வந்த புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த விசாரணையின், அடிப்படையில் தவறுகள் நிரூபிக்கப்பட்டால் நிச்சயமாக யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சித் தேர்தலுக்காக வெறியோட காத்திருப்பதாக சீமான் சொல்லியிருக்கிறார். பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதியிலும் சாதி பார்த்துதான் வேட்பாளரை நிறுத்தினார். வெறுப்பு அரசியல் பேசுவது, ஒரு தலைவருக்கு எதிராக பேசுவது; இதையெல்லாம் விட்டுட்டு உண்மையிலேயே வெற்றி பெறுவதற்கான நோக்கத்தோடு பேசினால் நிச்சயமாக உள்ளாட்சி தேர்தலில் ஏதாவது ஓரிரு இடத்தில அவர் வெல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி ஓடி ஒளியவில்லை என்றால் இத்தனை நாள் எங்கிருந்தார்? நீதிமன்ற நடைமுறைகளை தைரியமாக எதிர்கொண்டு நின்று இருக்க வேண்டியதுதானே?
இந்து சமய அறநிலையத் துறையில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம். கடந்த ஆட்சியில் என்னென்ன கோயில் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டிருக்கின்றன, என்னென்ன தவறுகள் நடந்திருக்கிறது என அனைத்தையும் ஆய்வு செய்து வருகிறோம். கோயில் சொத்துக்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும்” என்று அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்