Rock Fort Times
Online News

விநாயகர் சதுர்த்தி விழா – திருச்சியில் 600 இடங்களில் சிலைகள் அமைக்க இந்து முன்னணி முடிவு

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, திருச்சியில் 600 இடங்களில் சிலைகள் அமைக்க இந்து முன்னணி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் சீராத்தோப்பு பாரதியார் குருகுலத்தில் நேற்று ( ஆகஸ்ட் -16 ) நடைபெற்றது. கோட்ட செயலாளர் போஜராஜன், பொது செயலாளர் மனோஜ்குமார் தலைமை வகித்தனர். மாநில பொது செயலாளர் முருகானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, 5 ஆம் தேதி காலை திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் ஆலயத்தில் பொறுப்பாளர்கள், பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து 7 ஆம் தேதி திருச்சி மாநகரில் 600 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு, கோ. அபிஷேகபுரம் மண்டல் பொதுச் செயலாளர் கணேஷ்குமார், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், இந்து ஆட்டோ முன்னணி ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜசேகர் வரவேற்றார். மாவட்ட பேச்சாளர் மணிகண்டன் நன்றி தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்