தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். கடந்த 2-ந் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்த அவர், அன்றைய தினமே மரக்கடை காந்தி மார்க்கெட் அருகே பிரச்சாரம் செய்தார். அதன்பிறகு மற்ற மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு. அங்கு போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். திருச்சி கிழக்கில் போட்டியிடும் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டி போட்டு கொண்டு தொகுதி முழுவதும் வலம் வந்து வாக்கு சேகரித்து வரும் நிலையில், திருச்சி கிழக்கில் போட்டியிடும் விஜய் மீண்டும் பிரசாரம் செய்ய வருவாரா? என்ற எதிர்பார்ப்பு த.வெ.க. தொண்டர்களிடம் ஏற்பட்டது. இந்தநிலையில், விஜய் நாளை (19-04-2026) மாலை திருச்சியில் பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வரும் அவர் விமானநிலையம் வயர்லெஸ் ரோடு, டி.வி.எஸ்.டோல்கேட், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று சிந்தாமணி அண்ணாசிலை, சத்திரம் பஸ்நிலையம், சிங்காரத்தோப்பு, மரக்கடை, பாலக்கரை வழியாக சாலை வலம் செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Comments are closed.