திருச்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் நாளை( மே 9 )திறப்பு: முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு…!
திருச்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை(09-05-2025) நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேருந்து நிலையத்தை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதற்காக பஞ்சப்பூரில் நடைபெறும் முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு இன்று( மே 8) அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட கழக செயலாளர் வைரமணி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக. தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று காலை 11-30 மணியளவில் விமானம் மூலம் திருச்சி வந்தடைகிறார். விமான நிலையம் அருகே முதலமைச்சருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து துவாக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளியை திறந்து வைக்கிறார்.
பிறகு திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். இன்று மாலை சாலை மார்க்கமாக பொதுமக்களையும், கழகத் தொண்டர்களையும் சந்திக்கிறார். மாலை 6 மணி அளவில் அரசு மருத்துவமனை அருகே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை திறந்து வைக்கிறார். இரவு 7 மணி அளவில் கலைஞர் அறிவாலயம் சென்று கழக நிர்வாகிகளை சந்திக்கிறார். இரவு 8-30 மணி அளவில் விருந்தினர் மாளிகை செல்கிறார். நாளை ( 9-ந் தேதி) காலை 9 மணி அளவில் விருந்தினர் மாளிகையிலிருந்து புறப்பட்டு பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ள பெரியார், அண்ணா, கலைஞர் சிலைகளை திறந்து வைத்து ரூ .408.36 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து முனையத்தை திறந்து வைத்து விழா மேடைக்கு செல்கிறார். அங்கு 55,000 பேருக்கு பட்டா, மாற்றுத் திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேருரை ஆற்றுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Comments are closed.