திருச்சி மாவட்டத்தில் உள்ள மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கக்கூடிய மூன்று சக்கர வாகனங்களுக்கான நேர்முக தேர்வு இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின் பகுதியில் நடைபெற்றது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் அந்த நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள நிலையில் அவர்கள் அமர்வதற்கோ அல்லது அதிகாரிகளை சந்திப்பதற்கோ படிக்கட்டுகளை, அதுவும் கைப்பிடியே இல்லாத படிகட்டுகளை பயன்படுத்தி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் குடிதண்ணீா் வசதியும், நிழலில் நிற்பதற்கு போதிய இட வசதி இல்லாமலும் காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு சிறு சிறு பிரிவுகளாக பிரித்து அவர்களுக்கான நேர்முகத் தேர்வுகளை நடத்திட வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
