புத்தாண்டில் துயர சம்பவம்: திருச்சியில் போட்டி போட்டு இயக்கப்பட்ட தனியார் பேருந்து மோதி கேட்டரிங் உரிமையாளர் பலி…!
திருச்சி, பொன்மலை அடிவாரம் பகுதி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் நிக்கோ அருண் தாமஸ் (வயது 54). இவர் சொந்தமாக கேட்டரிங் நடத்தி வந்தார். ஒரு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு உணவு சமைப்பதற்காக இன்று(01-01-2025) அதிகாலை 5 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் காய்கறி வாங்க காந்தி மார்க்கெட்டிற்கு சென்றார். அங்கு காய்கறிகளை வாங்கிக் கொண்டு தன்னுடன் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த நண்பரை காய்கறி சாமான்களை எடுத்துக் கொண்டு முன்னே செல்லுமாறு கூறிவிட்டு அவருக்கு பின்னால் நிக்கோ அருண் தாமஸ் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். மேலப்புதூர் மேம்பாலத்தில் அவர் வந்து கொண்டிருந்தபோது திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு இரண்டு தனியார் பேருந்துகள் மேலப்புதூர் வழியாக போட்டி போட்டுக்கொண்டு வேகமாக வந்தன. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு தனியார் பேருந்து, நிக்கோ அருண் தாமஸ் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிக்கோ அருண் தாமஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாநகரில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டு கொண்டு சென்று விபத்துகளை ஏற்படுத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால் உயிர் பலியும், பொருட்சேதமும் ஏற்பட்டு வருகின்றன. ஆகவே, விபத்துகளை ஏற்படுத்தும் தனியார் பேருந்து டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உபயோகிப்பாளர் உரிமை இயக்க மாநில பொதுச் செயலாளர் மகேஸ்வரி வையாபுரி மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Comments are closed.