Rock Fort Times
Online News

கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய தண்டவாளங்கள்- சென்னையில் இருந்து இயக்கப்படும் 6 ரயில்கள் ரத்து…!

ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை நள்ளிரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்ததை அடுத்து, விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால், விக்கிரவாண்டி – முண்டியம்பாக்கம் இடையேயான தண்டவாளத்தில் பாலத்துக்கு மேல் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால், ரயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  நேற்றிரவு தென் மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்பட்ட ரயில்கள் விழுப்புரத்திலிருந்து காட்பாடி வழியாக எழும்பூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூருக்கு இன்று(02-12-2024) காலை புறப்பட வேண்டிய பல்லவன், வைகை மற்றும் திருநெல்வேலியிருந்து இயக்கப்படும் வந்தே பாரத் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று ரயில்களும் இன்று பிற்பகல் சென்னையில் புறப்பட வேண்டிய நிலையில், ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய குருவாயூர் விரைவு ரயில், சோழன் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை மற்றும் மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயிலும் இன்று இரு மார்க்கமாகவும் ரத்தாகியுள்ளது. கோவையில் இருந்து தாம்பரம் வரும் ரயில் எண் 06185, சொச்சுவேலில் இருந்து தாம்பரம் வரும் ரயில் எண் 06036, நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் ரயில் எண் 06012 ஆகிய ரயில்கள் விழுப்புரத்துடன் நிறுத்தி வைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்