Rock Fort Times
Online News

திருச்சி, திருவானைக்காவலில் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருட்டு…! (சிசிடிவி காட்சிகள் இணைப்பு)

திருச்சி, திருவானைக்காவல் ட்ரக் ரோட்டில் மொபைல் போன் விற்பனையகம் மற்றும் சர்வீஸ் நிலையம் உள்ளது. இன்று(07-01-2025) அதிகாலை இந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் 7 செல்போன்கள் மற்றும் சார்ஜர் ஆகியவற்றை திருடி சென்றுள்ளார். இதன் மதிப்பு 50 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கடையின் உரிமையாளர், ஸ்ரீரங்கம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிட்டபோது, ஹெல்மெட் அணிந்து கொண்டு ஒருவர் உள்ளே செல்வதும், கடையின் முன்புறமுள்ள கண்காணிப்பு கேமராவை திருப்பி வைப்பதும், டார்ச் லைட் மூலம் செல்போன்களை திருடுவதும் பதிவாகி இருந்தது. ஆனால் அவர் ஹெல்மெட் அணிந்து இருந்ததால் அவரது முகத்தை கண்டறிய முடியவில்லை. அவர் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளதால் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் பகுதியில் அடுத்தடுத்து 7 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு நடந்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே, போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்