அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:- திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் பள்ளி வளாகத்தில் புகுந்த விஷப்பாம்பு கடித்ததில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தில் அரசுப்பள்ளியில் விஷப்பூச்சி கடித்து 3-ம் வகுப்பு மாணவி உயிரிழந்ததாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. திமுக ஆட்சியில் அடிப்படைக் கட்டமைப்போ, சுகாதாரமோ இல்லாத அரசுப்பள்ளிகளின் அவல நிலையால், மாணவர்கள் உயிர் போகும் அளவு சம்பவங்கள் நிகழ்வது என்பது கொடுமையின் உச்சம். மேற்கூரை இடிந்து விழுந்து விடுமோ? சுவர் தன் மீது விழுந்துவிடுமோ? தரமற்ற உணவால் பாதிப்பு வருமோ? போன்ற அச்சங்களுக்கு நடுவே தான் மாணவர்கள் அரசுப்பள்ளிகளுக்கு செல்லவேண்டி இருக்கிறது. இதற்கு நடுவே, கள்ளகுறிச்சி, ரிஷிவந்தியம் அருகே உள்ள கிழத்தோர் அரசுப்பள்ளியில் உயர்நிலை நீர்தேக்கத் தொட்டியை மாணவர்களை வைத்து சுத்தம் செய்ததாக வருகின்ற செய்தி மேலும் அதிர்ச்சி அளிக்கின்றது. இதற்கு கூட ஆட்கள் நியமிக்க வக்கற்ற நிலையில் தான் பள்ளிக்கல்வித்துறை இருக்கிறதா? அரசுப்பள்ளிக்கு மாணவர்கள் படிக்க வந்தார்களா? அல்லது உங்களுக்கு வேலை செய்ய வந்தார்களா?. இப்படிப்பட்ட ஆபத்தான பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்துவது குற்றம் என்பது இந்த திமுக அரசுக்கு தெரியாதா? நிலைமை இவ்வாறு இருக்க”கல்வியிற் சிறந்த தமிழ்நாடு” என ஆடம்பர மேடை அமைத்து, போலியான சுய விளம்பரம் செய்துகொள்வது வெட்கக்கேடானது. பள்ளிகளின் பராமரிப்பை, சுகாதாரத்தை உறுதிசெய்ய வேண்டிய தனது தலையாய பணியை தூக்கி எறிந்துவிட்டு, ரீல்ஸ் எடுப்பது, கார் ஓட்டுவது, வாக்கிங் போவது என போட்டோஷூட் எடுப்பது மட்டுமே முதல்வரின் தலையாய வேலையாக இருக்கிறது. குரூப்- 2 போன்ற அதிமுக்கிய தேர்வுகளைக் கூட முறையாக நடத்த தெரியாதவர், தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு. விஷப் பூச்சி, பாம்புக் கடியால் உயிரிழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் உடனடியாக வழங்கிட வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.