ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் ஆற்காடு, ராணிப்பேட்டை தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. சோளிங்கர் மற்றும் அரக்கோணம் தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த 29ம் தேதி திமுக தலைமை வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில், ராணிப்பேட்டை தொகுதியில் அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு வெளியான பின்னரும், கடந்த 9 நாட்களாக அந்த தொகுதியில் திமுக சார்பில் தேர்தல் பணிகள் எதுவும் தீவிரமாக நடைபெறவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாளான இன்று (ஏப்.6), வினோத் காந்தி தமக்கான “B” படிவம் தன்னிடம் இல்லை என்றும், அது தனது தந்தையிடம் இருப்பதால் அவர் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது. அவர் சொன்னபடியே ராணிப்பேட்டை தொகுதியை தனது தந்தைக்கு விட்டுக் கொடுத்துள்ளார் வினோத் காந்தி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சட்டசபை தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அரிய வாய்ப்பை எனக்கு அளித்த தலைவருக்கும், சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கும் எனது இதயம் கனிந்த நன்றி. ஆனால், என் தந்தையார் மீண்டும் போட்டியிடும் உறுதியான விருப்பத்தை கருத்தில் கொண்டு, இந்த வாய்ப்பை அவருக்கு மரியாதையுடன் மீண்டும் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன். என்னை உறுதியாக ஆதரித்து நம்பிக்கை அளித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்னும் நீண்ட வாழ்க்கை முன் உள்ளது என்பதில் உற்சாகத்துடன், சேவை செய்து சாதிக்க நான் உறுதியுடன் இருக்கிறேன் என கூறியுள்ளார்.

Comments are closed.