திருச்சியில் பிசியோதெரபி செய்வதாக கூறி தாலிச்செயின் திருட்டு!- நர்ஸ் வேடமிட்ட கேடி லேடிக்கு “காப்பு ” !
திருச்சி, வரகனேரியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 72). பெயிண்டரான இவருக்கு திருமணமாகி அஞ்சலைமேரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக அஞ்சலைமேரி உடல்நிலை சரியில்லாமல் திருச்சி இ. பி. ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், ராஜமாணிக்கத்தின் வீட்டிற்கு வந்த பெண் ஒருவர், தான் மருத்துவமனையில் இருந்து வருவதாகவும், அஞ்சலைமேரிக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய அஞ்சலைமேரி அவரை வீட்டுக்குள் அழைத்து சென்றார். இதைத் தொடர்ந்து அப்பெண் பிசியோ சிகிச்சையைத் தொடர கழுத்தில் உள்ள தாலி சங்கிலியை கழற்றுமாறு கூறியுள்ளார். . இதையடுத்து தனது 1 1/4 பவுன் தாலி சங்கிலியை கழற்றி அருகில் வைத்துள்ளார். சிகிச்சை முடிந்து வீட்டிற்குள் சென்று அஞ்சலைமேரி பார்த்தபோது தாலி செயின் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெளியே சென்று பார்த்தபோது அந்த நர்ஸ் பெண்ணையும் காணவில்லை. இதுகுறித்து ராஜமாணிக்கம் காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நர்ஸ் என பொய் சொல்லி தாலிச்செயினை திருடி சென்றது திருச்சி உறையூர் கீழபாண்டமங்கலத்தை சேர்ந்த சார்லின் மேரி என்பது தெரியவந்தது. அப்பெண் மீது வழக்குபதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.